Dec 5, 2010

ஒரு ஜென் (ஜெம்) கதை

ஒரு ஊரில் அறிவு மிகுந்த ஜென் துறவி வாழ்ந்து வந்தார் . ஊருக்கு வெளியில் ஆசிரமம் அமைத்து தன் மாணவர்களுக்கு வாழ்க்கையைப் பாடமாக சொல்லிக் கொடுத்து கொண்டிருந்தார் . அறிவும் அனுபவமும் மிக்க அந்த துறவியிடம் பாடம் கற்க நிறைய மாணவர்கள் வந்து விரும்பி கற்றனர்.
அப்படி கற்க வருபவர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக இருக்க மாட்டார்கள் அல்லவா ?

அவர்களில் சிலர் தாங்கள் முழுவதும் கற்று அறிந்து விட்டதாகவும் எனவே தங்கள் ஊர்களுக்கு திரும்பிப்  போக முடிவு செய்துவிட்டதாக துறவியிடம் சொல்லி விட்டு அவர் பதிலுக்கு காத்திராமல் திரும்பி சென்றனர் . அந்த ஜென் துறவியோ எதுவுமே நடக்காதது போலப் புன்முறுவல் புரிந்தார் .

சில வருடங்களுக்குப் பிறகு சொல்லாமல் சென்ற அந்த மாணவர்கள் மீண்டும் குருவை தேடி வந்தனர். அவர்களை குரு அன்புடன் வரவேற்றார் . தாங்கள் எல்லோரும் நல்ல நிலையில் இருப்பதாகவும் இருந்தும் மன நிம்மதி இல்லை என குறை பட்டனர் . மீண்டும் அந்த ஜென் துறவி புன்முறுவல் புரிந்தார்.

அவர்கள் அனைவருக்கும் தேநீர் வழங்க ஏற்பாடு செய்தார். தேநீர் கோப்பையும் ஊற்றிக்  குடிப்பதற்காக காலிக் கோப்பைகளும்  அவர்கள் முன்னே வைக்கப்பட்டன.  காலிக்  கோப்பைகள் வைரம் பதித்தவை, தங்கம் , வெள்ளி , அழகிய வேலைபாடு கொண்டவை , மண் மற்றும் கண்ணாடியில் செய்யப்பட்டவை என பல கோப்பைகள் இருந்தன . அனைவரும் அவரவர்களுக்குப் பிடித்த கோப்பைகளை எடுத்துக் கொண்டனர் .

மீதமிருந்த மண் மற்றும் கண்ணாடி கோப்பைகளை கண்ட குரு சொன்னார் , நீங்கள் அனைத்து உயர்ந்த ரக கோப்பைகளை எடுத்துக் கொண்டதுடன் அருகில் இருந்தவருடன் உங்கள் கோப்பையை ஒப்பிட்டுக் கொண்டீர்கள். தேநீர் அருந்துவது தான் நோக்கமே அன்றி கோப்பை அல்ல . வாழ்க்கை என்பது தேநீர் போன்றது , பதவி , அதிகாரம் , பணம் போன்றவை கோப்பைகள் போன்றது . பல சமயம் நாம் கோப்பையில் தான் கவனத்தை வைக்கிறோம் ஆகையால் தான் நாம் வாழ்க்கையை இழக்கிறோம் . கோப்பை தேவையே அன்றி முக்கியமல்ல . இனிமேலாவது கோப்பைக்கு முக்கியத்துவம் தராமல் தேநீருக்கு முக்கியத்துவம் தாருங்கள் என்றார்.

வந்த மாணவர்கள் தாங்கள் தவறை உணர்ந்து வாழ்க்கையின் முக்கியத்துவத்தை உணர்த்திய குருவிற்கு நன்றி கூறி விடை பெற்றனர் .